இந்தியாவில் கொரோனாவின் 3ஆவது அலை ஏற்படாமல் இருக்க அரசு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கான ஆராய்ச்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்திலும் விஞ்ஞானிகள் கொரோனா தொடர்பான ஆய்வுகள் மேற்கொண்டனர்.

இதில் நீரிழிவு மற்றும் உடல் பருமன் நோய்க்கும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் நோய் கூறுகளுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதன் காரணமாகவே நீரிழிவு மற்றும் உடல் பருமன் நோய் பாதிக்கப்பட்டவர்களை கொரோனா வைரஸ் எளிதில் தாக்குகிறது என்பதும் தெரியவந்தது.

நீரிழிவு மற்றும் உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்கள் கிரீன் டீ குடிக்க பரிந்துரைப்பார்கள். எனவே போபாலில் உள்ள விஞ்ஞானிகள் கிரீன் டீ குறித்தும் ஆய்வு செய்தனர்.


இதில் கிடைத்த முடிவுகளில் கிரீன் டீயில் உள்ள மூலக்கூறுகளுக்கு கொரோனாவை எதிர்க்கும் சக்தி இருப்பது தெரியவந்தது.

மஞ்சள், திராட்சை போன்றவற்றிற்கு தனியாக மருத்துவ குணங்கள் உள்ளன. இவை உடல் பருமன், நீரிழிவு நோய்க்கு அளிக்கப்படும் மருந்துகளில் முக்கிய பங்கு வகிக்கிறது.

அந்த வகையில் கிரீன் டீயிலும் தாவரம் சார்ந்த உணவுகளில் காணப்படும் மருத்துவ குணங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் கிரீன் டீயில் உள்ள கேட்சின்ஸ் எனும் ஒருவிதமான பாலிபீனால்கள் இருப்பதும் தெரியவந்தது. இதுவும் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவையாகும்.

இதனை, இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் முதன்மை விஞ்ஞானி அம்ஜத் உசைன் கூறியுள்ளார்.

கிரீன் டீ அருந்துவதால் இதய கோளாறு, கண் மற்றும் நரம்பு தளர்ச்சி, சிறுநீரக கோளாறு போன்ற நோய்களில் இருந்தும் நம்மை பாதுகாத்து கொள்ள முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்