நடப்பு ஐபிஎல் சீசனின் லீக் சுற்றுப் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. சென்னை, டெல்லி, பெங்களூர் என மூன்று அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிவிட்டன. நான்காவது இடத்திற்கான போட்டியில் மூன்று அணிகள் மல்லுக்கு நிற்கின்றன.

இந்த நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் 53-லீக் ஆட்டத்தில் விளையாடியது. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இருந்தும் பார்வையாளர்களின் மனதை வென்றுள்ளார் சென்னையின் பவுலிங் ஆல் ரவுண்டர் தீபக் சாஹர்.

ஆட்டம் முடிந்த பிறகு மைதானத்தின் பார்வையாளர் மாடத்தில் நின்றுக் கொண்டிருந்த தனது தோழியிடம் காதலை தெரிவித்துள்ளார். அவர் காதலை சொன்னதும் அதனை ஏற்றுக் கொண்டார் அவரது தோழி. உடனடியாக இருவரும் பரஸ்பரம் மோதிரம் மாற்றிக் கொண்டனர்.

இந்த காட்சிகள் போட்டியை மைதானத்தில் நேரில் பார்க்க வந்த ரசிகர்கள், டிவியில் நேரலையில் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள், சமூக வலைத்தளங்களிலும் ரசிகர்கள் இருவரையும் பாராட்டி வாழ்த்தி வருகின்றனர்.