ஜப்பான் நாட்டில் கொரோனா தொற்றால் 1.2 லட்சம் பேர் பாதிப்படைந்து உள்ளனர். 2 ஆயிரம் பேர் உயிரிழந்து உள்ளனர். பிற நாடுகளுடன் ஒப்பிடும்பொழுது, பாதிப்புகளை அரசு குறைத்துள்ளது. இருந்தபோதிலும், குளிர்கால சூழலை கவனத்தில் கொண்டு மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. 

அந்நாட்டில் கடை ஒன்றில் புது வரவாக வந்துள்ள ரோபோவீ என்ற பெயரிடப்பட்ட ரோபோ வாடிக்கையாளர்களுடன் பேசி அசத்தி வருகிறது. "எங்கள் கடைக்கு வரவேற்கிறேன். நான் ரோபோவீ " என கூறுகிறது.

கொரோனா தடுப்புக்கான சர்வதேச நடவடிக்கைகளான முக கவசங்கள் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் உள்ளிட்ட விடயங்களை பின்பற்றும்படி கடைக்கு வருவோரிடம் கூறுகிறது.

இதற்காக ரோபோவுடன் இணைக்கப்பட்டுள்ள கேமரா மற்றும் முப்பரிமாண லேசர் அலைக்கற்றை தொழில்நுட்ப உதவியுடன் இதனை ரோபோவீ மேற்கொள்கிறது. கடைக்கு வரும் வாடிக்கையாளர் முக கவசம் அணியவில்லை எனில், தனது கேமராவால் கண்காணித்து அவரை நெருங்கி செல்கிறது.

இதன்பின்னர், "உங்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதற்கு மன்னிக்கவும். ஆனால், தயவு செய்து முக கவசம் அணியுங்கள்" என்று கேட்டு கொள்கிறது. வாடிக்கையாளர் முக கவசம் அணிவது கேமராவை கொண்டு கண்காணிக்கிறது.

முக கவசம் அணிந்தபின் அவரிடம், புரிந்து கொண்டதற்கு நன்றி என கூறுகிறது. கடைகளில் அருகருகேயாரேனும் நின்றால், அவர்களை சமூக இடைவெளி கடைப்பிடித்து தள்ளி நிற்க அறிவுறுத்துகிறது. இதுதவிரகடையில் வாடிக்கையாளர்கள் தேவையான உடைகளை தேர்வு செய்யவும் உதவி புரிகிறது.