கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்ட மெரினா கடற்கரை 8 மாதங்களுக்கு இன்று திறக்கப்பட்டு, பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது.

 

கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் மாதம் இறுதி முதல் கடற்கரை, பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. அதன்பின்னர் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. எனினும் சென்னையின் மிக முக்கிய சுற்றுலா தளமான மெரினா கடற்கரைக்கு மக்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. 


 
இதற்கிடையே, சென்னை ஐகோர்ட்டில் மீனவர் நலச்சங்கம் சார்பில் வந்த வழக்கு ஒன்றில், மெரினா கடற்கரை எப்போது திறக்கப்படும்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அரசு திறக்கவில்லை என்றால், ஐகோர்ட்டு திறக்க உத்தரவிடும் என்றும் எச்சரித்தனர். சென்னை மாநகராட்சி சார்பில் ஆஜரான வக்கீல், மெரினா கடற்கரையை டிசம்பர் 14-ம் தேதி திறக்க அரசு திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்தார்.

 

அதன்பின்னர் மெரினா திறப்பு தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம்    
30ம் தேதி அறிக்கை வெளியிட்டார். அதில், ‘நோய்த்தொற்றின் நிலவரத்துக்கு ஏற்ப நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி டிசம்பர் 14-ம் தேதி முதல் மெரினா உள்ளிட்ட கடற்கரைகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படும்’ என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.