இந்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இப் போராட்டத்துக்கு இந்தியா முழுவதும் மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் ஆதரவு பெருகி வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் தலைநகர் வொஷிங்டனில் அமைந்துள்ள இந்திய தூதரகம் அருகே விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக பலர் திரண்டனர்.
இதன்போது அங்கிருந்த சிலர் காலிஸ்தான் கொடியை காந்தி சிலை மீது போர்த்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
ஏற்கனவே, கடந்த ஜூன் மாதம் கறுப்பின இளைஞர் ஜோர்ஜ் பிளாய்டு கொல்லப்பட்டதை எதிர்த்து நடந்த போராட்டத்தில் காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டிருந்தமை கறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் அமைதி மற்றும் நீதிக்கான உலகளாவிய மரியாதைக்குரிய அடையாளமான காந்தி சிலை மீது காலிஸ்தான் கொடியை போர்த்தியதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்திய தூதரகம் இது தொடர்பானவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக்கொண்டுள்ளது.