கோலிவுட்டின் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்த வடிவேலு ஹீரோவாக நடித்த இம்சை அரசன் 23ம் புலிகேசி படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதையடுத்து இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படம் பட வேலையை துவங்கினார்கள்.

சிம்புதேவன் இயக்க அந்த படத்தை ஷங்கர் தயாரித்தார். கோடிக் கணக்கில் செலவு செய்து பிரமாண்டமாக செட் போட்டு படப்பிடிப்பை துவங்கி 10 நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் சிம்புதேவனுக்கும், வடிவேலுவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதையடுத்து வடிவேலு அந்த படத்தில் இருந்து விலகினார்.

இந்நிலையில் இம்சை அரசன் பிரச்சனையை தீர்த்து வைக்கும் முயற்சியில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஈடுபட்டுள்ளாராம். வடிவேலுவுக்கும், ஷங்கருக்கும் இடையேயான பிரச்சனையை பேசித் தீர்க்க முயன்று வருகிறாராம். 

ஐசரி கணேஷின் முயற்சியால் விரைவில் இம்சை அரசன் 24ம் புலிகேசி பட பிரச்சனை தீர்ந்து படப்பிடிப்பு துவங்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தான் மீண்டும் நடிக்க வரப் போவதாக வடிவேலு சூசகமாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிக்க ஆசை இருக்கிறது, ஆனால் யாருமே கூப்பிட மாட்டேன் என்கிறார்கள் என வடிவேலு வருத்தப்பட்டதை பார்த்து ரசிகர்கள் கவலை அடைந்தனர்.