நேபாள நாட்டில் ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி இந்தியர்கள் உள்பட 20 பேர் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேபாள நாட்டில் உள்ள மேலம்ஷி மற்றும் இந்திரவதி ஆறுகளில் நேற்று திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நேற்றுமுன்தினம் பெய்த கனமழை காரணமாகவும், மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாகவும் இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

இதனால், அந்நாட்டின் பக்மதி மாகாணத்தில் உள்ள சிந்துபல்சவுக் மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் புகுந்தது.

இந்த திடீர் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 20 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு மாயமாகியுள்ளதாக சிந்துபல்சவுக் மாவட்ட அதிகாரி தெரிவித்துள்ளார். 

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு மாயமான 20 பேரில் 3 இந்தியர்கள், 3 சீனர்களும் அடங்குவார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 20 பேரையும் தேடும் பணியில் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.