ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது போர்த்துக்கல் கால்பந்து அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஒரு சிறிய செய்கையால் கோகோ – கோலா குளிர்பானத்தில் பங்குகள் சுமார் 79,000 கோடி (இலங்கை ரூபா) சரிந்திருக்கிறது. கோகோ – கோலா நிறுவனம் யூரோ கால்பந்து போட்டியின் அதிகாரபூர்வ விளம்பரதார நிறுவனமாகும்.

அந்நிலையில் ,யூரோ போட்டி கால்பந்து தொடரில் நேற்று போர்த்துக்கல் அணியும், ஹங்கேரி அணியும் மோதினர்.

மேலும் ,அதற்கு முன்பாக ஹங்கேரி தலைநகர் புத்தபெஸ்ட் நகரில் ஊடகவியலாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் போர்த்துக்கல் அணித்தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் அந்த அணியின் முகாமையாளர் பெர்னாண்டோ சான்ரோஸ் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது கிறிஸ்டியானோ ரொனால்டோ முன்பாக இரண்டு கோகோ – கோலா குளிர்பான பாட்டில்கள் வைக்கப்பட்டிருந்தன.

இவற்றை எடுத்து மாற்றி வைத்த ரொனால்டோ, அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து காட்டி தண்ணீரை குடியுங்கள் என்றார். கால்பந்து உலகின் முடிசூடா மன்னனாக இருந்து வரும் ரொனால்டோ, பல நேரங்களில் கோகோ – கோலா உள்ளிட்ட துரித உணவுகளுக்கு எதிராக தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார். போர்த்துக்கல் மட்டுமின்றி ஐரோப்பிய கண்டம் முழுவதுமாக தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் ரொனால்டோவின் இந்த ஒரு செய்கை ஐரோப்பிய பங்கு வர்த்தகத்தில் கோகோ – கோலாவிற்கு பெரும் நஷ்டத்தை உருவாக்கியுள்ளது.

மாலை 3 மணிக்கு வர்த்தகம் தொடங்கிய போது கோகோ – கோலாவின் பங்குகளின் மதிப்பு 242 பில்லியன் டொலராக இருந்தது. ஆனால் கோகோ – கோலா பாட்டில்களை நகர்த்தி வைத்த கிறிஸ்ட்டியானோ ரொனால்டோவின் ஒரு சாதாரண செயலுக்கு பிறகு சில நிமிடங்களில் 4 பில்லியன் டொலர் அதாவது இந்திய மதிப்பில் 29,337 கோடி (சுமார் 79,000 கோடி இலங்கை) ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது.