ஆப்கானிஸ்தானில் 2 பேருந்துகளில் அடுத்தடுத்து குண்டு வெடித்ததில் 10 பேர் உடல் சிதறி பலியானார்கள்.

ஆப்கானிஸ்தானில் கடந்த சில வாரங்களாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக தலைநகர் காபூலில் அடிக்கடி பயங்கரவாத தாக்குதல்கள் நிகழ்த்தப்படுகின்றன.

இந்த நிலையில் காபூலின் மேற்குப் பகுதியில் ஹசாரா நகரில் உள்ள ஒரு மசூதிக்கு அருகே நின்ற பயணிகள் பேருந்து ஒன்றில் எதிர்பாராத வகையில் குண்டு வெடித்ததில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 8 பேர் பலத்த காயமடைந்தனர்.

இந்த சம்பவம் நடந்த சில மணி நேரத்துக்குள் அதே பகுதியில் மற்றொரு பேருந்தில் குண்டு வெடித்தது. இதில் 4 பேர் உடல் சிதறி பலியாகியதுடன் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.‌

அடுத்தடுத்து நடந்த குண்டுவெடிப்புகளால் ஹசாரா நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதனிடையே இந்த 2 குண்டு வெடிப்புகளிலும் படுகாயமடைந்த 14 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.