மலேசிய நாட்டு வான் எல்லைக்குள் 16 சீன விமானங்கள் அத்துமீறி நுழைந்துள்ளன.

தென் சீன கடலில் சீனா தனது ஆதிக்கத்தை அதிகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதனால், தென் சீன கடல் பகுதியை சுற்றியுள்ள நாடுகளுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.

அந்த வகையில், தென் சீன கடல் பகுதியில் அமைந்துள்ள மலேசிய நாட்டின் வான் எல்லைக்குள் 16 சீன விமானங்கள் திடீரென அத்துமீறி நுழைந்துள்ளன.இதையடுத்து, மலேசிய விமானப்படை விமானங்கள் உடனடியாக சீன விமானங்கள் சுற்றித்திரிந்த பகுதிக்கு அனுப்பப்பட்டபோது மலேசிய வான் எல்லையில் இருந்து சீன விமானங்கள் விலகி சென்றுவிட்டன. 

இந்த விவகாரம் குறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் மலேசியா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

தங்கள் விமானங்கள் எந்த நாட்டின் வான் எல்லைப்பரப்பிற்குள்ளும் அத்துமீறி நுழையவில்லை எனவும், சட்டவிதிகள் படி சர்வதேச வான் எல்லைபகுதியிலேயே சென்றதாகவும், இது வழக்கமான பயிற்சி தான் எனவும் சீனா தெரிவித்துள்ளது.