சீனா வழங்கிய மூலப்பொருட்களின் உதவியோடு பாகிஸ்தான் உருவாக்கியுள்ள ‘பாக்வேக்’ தடுப்பூசியின் விநியோகம் ஆரம்பமாகியுள்ளது.

வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து கொரோனா தடுப்பூசிகளை இறக்குமதி செய்து பயன்படுத்தி வந்த பாகிஸ்தான், முதல் முறையாக உள்நாட்டில் தடுப்பூசி உற்பத்தியை தொடங்கி உள்ளது. சீன அரசுக்கு சொந்தமான கான்சினோ நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியின் மூலப்பொருட்கள் செறிவூட்டப்பட்டு மிக அடர்த்தியான நிலையில் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டது. 

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள தேசிய சுகாதார நிறுவனத்தில் இவை  தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு பின்னர் பல பரிசோதனைகளின் பின், 18 ஆயிரம் பேரிடம் இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டபோது இதன் செயல்திறன் 74.8 சதவீதமாக இருப்பது கண்டறியப்பட்டது. 

இதனையடுத்து ‘பாக்வேக்’ எனப் பெயரிடப்பட்ட இந்த தடுப்பூசியின் விநியோகம் பாகிஸ்தானில் தொடங்கியுள்ளது. அடுத்த சில நாட்களில் பாகிஸ்தானில் ‘பாக்வேக்’ தடுப்பூசி தயாரிப்பு பெரிய அளவில் தொடங்க உள்ளதாக பாகிஸ்தான் பிரதமரின் சுகாதாரத்துறை ஆலோசகர் டாக்டர்.பைசல் சுல்தான் தெரிவித்துள்ளார்.