இந்தியாவில் கண்டறியப்பட்ட புதிய கொரோனா வைரஸ்களுக்கு ‘காப்பா’, ‘டெல்டா’ என உலக சுகாதார நிறுவனம் பெயர் சூட்டி உள்ளது.

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து வருகிறது. இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் என பல நாடுகளிலும் உருமாறிய கொரோனா வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இத்தகைய வைரஸ்களுக்கு உலக சுகாதார நிறுவனம் புதிய பெயர்களை சூட்டி உள்ளது.

இது குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் கொரோனா தொழில்நுட்ப குழுவின் தலைவர் வைத்தியர் மரியா வான் கெர்கோவ் டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கையில்..

“உருமாறிய கொரோனா வைரஸ்களை எளிதாக குறிப்பிட வசதியாக புதிய பெயர்களை உலக சுகாதார நிறுவனம் அறிவிக்கிறது. அவை தற்போதைய அறிவியல் பெயர்களுக்கு மாற்று கிடையாது. பொது விவாதத்துக்கு உதவும் வகையில்தான் இந்த பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன” என கூறி உள்ளார்.

இந்நிலையில் இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட ‘பி.1.617.1’  வைரஸிற்கு காப்பா என்றும், ‘பி.1.617.2’ வைரசுக்கு டெல்டா என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மேலும் இங்கிலாந்தில் கண்டறியப்பட்டுள்ள ‘பி.1.1.7’ உருமாறிய வைரஸிற்கு பெயர் ஆல்பா என்றும் தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ‘பீ.1.351’ வைரஸிற்கு பீட்டா என்றும் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வைரசஸ்களுக்கு பெயர் எப்சிலான் மற்றும் அயோட்டா எனவும் இவ்வாறு பல்வேறு நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள உருமாறிய வைரஸ்களுக்கு புதிய பெயர்களை உலக சுகாதார நிறுவனம் சூட்டி உள்ளமை குறிப்பிடத்தக்கது.