பாகிஸ்தானை விபசார வீடு என குறிப்பிட்டு பேசிய ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகருடனான உறவை பாகிஸ்தான் துண்டித்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹம்துல்லா மொஹிப், நங்கர்ஹார் மாகாணத்தில் பொது கூட்டத்தில் பேசும்பொழுது, பாகிஸ்தானை ஒரு விபசார வீடு என கூறியுள்ளார்.

இது பாகிஸ்தான் அரசை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியது.இது குறித்து அந்நாட்டின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்பொழுது, ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் சமீபத்திய பேச்சால் அவருடன் இனி பாகிஸ்தான் அரசு இருதரப்பு சந்திப்புகளில் ஈடுபடாது.

மேலும் ஆப்கானிஸ்தான் அரசிடம், எங்களது கடுமையான எதிர்ப்பினை பதிவு செய்துள்ளோம் என கூறினார்.

இதுபோன்ற பேச்சுகள் இரு நாடுகளுக்கு இடையேயான நம்பிக்கை மற்றும் பரஸ்பர உறவை குழிதோண்டி புதைத்துள்ளது என்றும் பாகிஸ்தான் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

எனினும், தொடர்ச்சியாக பாகிஸ்தான் மற்றும் அதன் உளவு அமைப்பு மீது மொஹிப் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறார்.  தலீபான்களுக்கு ஆதரவு வழங்கி, அவர்களை வழிநடத்தி செல்கின்றனர் என்றும் தெரிவித்து உள்ளார்.

பாகிஸ்தானில் பாஷ்டூன்கள் மற்றும் பலூச் இன மக்கள் உள்ளிட்ட பழங்குடிகள் தங்களது உரிமைகளை பெற போராடி வருகின்றனர் என்றும் மொஹிப் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.