உலக சுகாதார அமைப்பு சீனாவை விசாரிப்பது போல் அமெரிக்காவையும் விசாரிக்க வேண்டும் என சீனா கூறி உள்ளது.

சீனாவின் உகான் நகர ஆய்வகத்திலிருந்து தான் கொரோனா வைரஸ் பரவியது என அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்ற நிலையில் அதனை சீனா தொடர்ந்து மறுத்து வருகிறது.

இந்த நிலையில்  கொரோனா பரவியதன் காரணத்தை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளை தீவிரபடுத்துமாறு  அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உளவுத்துறை அமைப்புகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் 90 நாட்களுக்குள் இது தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பு சீனாவை விசாரிப்பது போல் அமெரிக்காவையும் விசாரிக்க வேண்டும்  சீனா கூறி உள்ளது.

ஜோ பைடனின் திடீர் உத்தரவை கடுமையாக எதிர்த்துள்ள சீனா, அமெரிக்கா மீது கடுமையான குற்றம்சாட்டுகளை முன்வைத்துள்ளது. இது தொடர்பாக, கருத்து தெரிவித்துள்ள சீனா வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளரான ஜாவோ லிஜியன் கூறியதாவது

உலகமே இந்த பெருந்தொற்றை எதிர்த்து போராடி வரும் சூழலில் உலக சுகாதார அமைப்பை அவமதித்தது மட்டுமில்லாமல், நாடுகளுக்கிடையேயான ஒற்றுமையை சீர்குலைக்கிறார் பைடன்.

கொரோனா தொற்றின் தொடக்கம் குறித்து எங்களுக்கு அமெரிக்காவின் மீது சந்தேகம் உள்ளதால் உலக சுகாதார அமைப்பு சீனாவை விசாரிப்பது போல் அமெரிக்காவையும் விசாரிக்க வேண்டும். உலகமெங்குமுள்ள அமெரிக்காவுக்கு சொந்தமான ஆய்வகங்களில் நிபுணர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அதுவே வெளிப்படையான விசாரணையாக இருக்கும் என கூறி உள்ளார்.

அமெரிக்கா உள்நோக்கத்துடனேயே இந்த விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. ஈராக் நாட்டிற்கு கோடிக்கணக்கில் ஆயுதங்கள் விற்கப்பட்டது குறித்து விமர்சனம் எழுந்துள்ளதால் அதை திசைமாற்றுவதற்காகவே சீனா மீது அவதூறு கருத்துக்களை பரப்பி இதை செயல்படுத்தியுளார் ஜோ பைடன் என தெரிவித்துள்ளார்.