கொழும்பு துறைமுகத்தை அண்மித்த கடற்பரப்பில் தீ பரவியுள்ள கப்பலிலிருந்து வெளியேறும் இரசாயண திரவம் மற்றும் பொருட்கள் கொழும்பு மற்றும் நீர்கொழும்பு பகுதிகளின் கடற்கரைகளில் கரையொதுங்குவதற்கு வாய்ப்புள்ளதாக சமுத்திர சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவிக்கின்றது.

இவ்வாறு கரையொதுங்கு பொருட்களையோ அல்லது இரசாயண திரவத்தையோ கையில் எடுக்க வேண்டாம் என அதிகார சபை கோரிக்கை விடுத்துள்ளது.

இவ்வாறு ஏதேனும் திரவம் அவதானிக்கப்படும் பட்சத்தில், அது குறித்து இலங்கை கடற்படை அல்லது பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறு சமுத்திர சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

குறித்த கப்பலில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தை அடுத்து, கப்பலில் இருந்த 8 கொள்கலன்கள் கடலில் வீழ்ந்துள்ளன.

இவ்வாறு கடலில் வீழ்ந்துள்ள கொள்கலனின் வெடிப்பு ஏற்படக்கூடிய திரவங்கள் காணப்படுகின்றமையினால், அது அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

களனி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் இந்த பொருட்கள் மிதந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.