மதுபானத்தில் நச்சுதிரவத்தை கலந்து கணவனுக்கு கொடுத்த மனைவியை கைது செய்துள்ள சம்பவம்  மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த பெண் கடந்து இரு வாரங்களுக்கு முன்னர் அவரது கணவன் அருந்தும் மதுபானத்தலில் நச்சு திரவத்தை கலந்துள்ள நிலையில் அவர் அதனை குடித்து மயக்கம் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளார்.

இந்த நிலையில் குறித்த நபர் அருந்திய மதுபானத்தை வைத்திய அதிகாரிகள் பரிசோதித்து அதில் நச்சுதிரவம் கலக்கப்பட்டுள்ளதாக அறிக்கை சமர்ப்பித்தனர். இதனையடுத்து குறித்த நபரின் 51 வயதுடைய மனைவியான பெண்ணை சந்தேகத்தில் நேற்று கைது செய்தனர்.

குறித்த பெண்ணுக்கும் கணவனுக்கும் இடையே குடும்ப தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதில் கைது செய்யப்பட்ட பெண்ணை  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது கொரோனா காரணமாக அவரை நீதவான் பிணையில் விடுவித்துள்ளார்.