பாதாளக்குழு உறுப்பினரான சமயங் என்பவரின் சகாவான சத்துரங்க என்பவரால், சிறைச்சாலைக்குள் ஒரு வகையான போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக, சில காலங்களுக்கு முன்னரே புலனாய்வு பிரிவு உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் விமல் வீரவன்ஸ, இந்த போதை மாத்திரைகளே சிறைச்சாலையில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதற்கு காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.

 

பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்று வரும் வரவு செலவு திட்டம் தொடர்பான விவாதத்தின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 

குறித்த போதை மாத்திரைகள் வெலிக்கட சிறையில் உள்ள கைதிகள் பலருக்கு சத்துரங்கவால் வழங்கப்பட்டுள்ளதாகவும் போதை மாத்திரையை பயன்படுத்திய பின்னர், அவர்கள் இரத்தத்தை பார்க்க வேண்டுமென கூறும் சம்பவங்கள் பதிவாகியதையடுத்து, சத்துரங்க உள்ளிட்ட பல கைதிகள் வெலிக்கட சிறையிலிருந்து வேறு சிறைகளுக்கு மாற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்ததாக அமைச்சர் விமல் வீரவன்ஸ சபையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

இதுதொடர்பில் முழுமையாக அறிந்துள்ளமையால் தான் பாராளுமன்றில் இது குறித்து உரையாற்றுவதாகத் தெரிவித்துள்ள அமைச்சர் விமல், நேற்று மஹர சிறையில் இடம்பெற்ற சம்பவமானது, சர்வதேசத்தில் ஜனாதிபதிக்கு அபகீர்த்தியை ஏற்படுத்த சிலர் எடுக்கும் முயற்சிகளில் ஒன்றென்றும் தெரிவித்துள்ளார்.