இலங்கை

நேபாளத்தில் (Nepal) இலங்கையர்களை பணயக் கைதிகளாக வைத்திருந்த பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேபாள பொலிஸாரின் காத்மண்டு பள்ளத்தாக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நான்கு பாகிஸ்தானியர்களை கைது செய்துள்ளதாக பொலிஸ் கண்காணிப்பாளர் நகுல் போகரேல் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் குறித்த இலங்கையர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நேபாள பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வேலைக்காக பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்புவதாக கூறி, அழைத்து செல்லப்பட்ட இலங்கை பிரஜைகள் 4 பேரையே பணயக்கைதிகளாக குறித்த பாகிஸ்தான் பிரஜைகள் 4 பேரும் பிடித்து வைத்துள்ளனர்.

42 வயதுக்கும் 62 வயதுக்கும் இடைப்பட்ட பாகிஸ்தான் பிரஜைகள் கனடா (Canada), ருமேனியா (Romania)உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் வேலை வழங்குவதாக பொய்யான வாக்குறுதியை அளித்து இலங்கை பிரஜைகள் நால்வரிடம் இருந்து மில்லியன் கணக்கான ரூபாவை வசூலித்துள்ளனர்.

சொந்த நாட்டிலிருந்து அழைத்து வரப்பட்ட இலங்கையர்கள் பாகிஸ்தானியர்களால் தாக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், காத்மண்டுவில் உள்ள பல்வேறு இடங்களில் பாகிஸ்தானியர்கள் அவர்களை பணயக் கைதிகளாக வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.