நடிகை நயன்தாரா அடுத்தடுத்த வெற்றிப் படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வருகிறார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜவான் படம் 1000 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளது. பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானுடன் இந்தப் படத்தில் இணைந்திருந்தார் நயன்தாரா. தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக இருந்துவரும் நயன்தாரா, ஜவான் படம் மூலம் பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்துள்ளார்.

முதல் படமே அவருக்கு மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. ஷாருக்கான் ஜோடியாக, அட்லி இயக்கத்தில் நடித்துள்ளார் நயன்தாரா. இந்தப் படம் மிகச்சிறப்பான வெற்றியை பெற்றுள்ள நிலையில், பாலிவுட்டில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் நயன்தாராவிற்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, புதிய பாலிவுட் படத்தில் அவரை நடிக்க வைக்க தற்போது முயற்சிகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகவுள்ள பைஜூ பவ்ரா என்ற படத்தில்தான் நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ஹீரோவாக ரன்வீர் சிங் கமிட்டாகியுள்ள நிலையில், இந்த ஜோடி பாலிவுட்டில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். சஞ்சய் லீலா பன்சாலி பாலிவுட்டின் முன்னணி இயக்குநராக பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.

இவரது இயக்கத்தில் இறுதியாக அலியா பட் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த படம் கங்குபாய் கத்யவாடி. மேலும் இவரது இயக்கத்தில் தேவதாஸ், பஜிராவ் மஸ்தானி, பத்மாவத் போன்ற பல சூப்பர்ஹிட் படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில், தற்போது உருவாகவுள்ள இந்தப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தின் நயன்தாரா இணையவுள்ளதும் எதிர்பார்ப்புகளை அதிகரிக்கச் செய்துள்ளது.