இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான், நயன்தாரா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்த ஜவான் திரைப்படம் கடந்த மாதத்தில் வெளியானது.

இந்திய அளவில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் உருவாகியிருந்த இந்தப் படத்தின்மூலம் இயக்குர் அட்லீ பாலிவுட்டிலும் தன்னுடைய என்ட்ரியை வலிமையாக்கியுள்ளார். சர்வதேச பாக்ஸ் ஆபீசில் இந்தப் படம் 1000 கோடி ரூபாய்களை தாண்டி வசூலித்துள்ளது.

இந்நிலையில் அட்லீயின் அடுத்தப்படம் குறித்து அறிந்துக் கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். அடுத்ததாக விஜய்யின் தளபதி69 படத்தை அட்லீ இயக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே நடிகர்கள் ஷாருக்கான் மற்றும் விஜய்யை இனைத்து விரைவில் படமியக்கவுள்ளதாக அட்லீ பேட்டியொன்றில் கூறியிருந்தார். தற்போது அட்லீ கொடுத்துள்ள பேட்டியில் இருவரையும் தான் விட முடியாது என்றும் ஒருவர் தன்னுடைய மனைவி போன்றவர் மற்றவர் தன்னுடைய தாயை போன்றவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். தற்போது தான் இருக்கும் இந்த உயரத்திற்கு காரணம் தளபதி விஜய் தான் என்றும் அவர் தன்மீது நம்பிக்கை வைத்து அடுத்தடுத்த படங்களை கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.

அதேபோல நடிகர் ஷாருக்கானும் தன்மீது இருந்த நம்பிக்கையில் ஜவான் படத்தை இயக்கும் வாய்ப்பை தனக்கு கொடுத்ததாகவும் இந்த நம்பிக்கைதான் தனக்கு அதிகமான பொறுப்பை கொடுத்ததாகவும் கூறியுள்ளார். இதுவரை இந்த வாய்ப்பை ஷாருக்கான் தனக்கு கொடுத்ததற்கான காரணம் குறித்து தனக்கு தெரியாது என்றும் அவர் நினைத்திருந்தால், இந்திய அளவில் முன்னணி இயக்குநர்களை தேர்வு செய்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, ஷாருக்கான் மற்றும் விஜய்யை இணைத்து தான் படமியக்க விரும்புவதாக கூறியுள்ள அட்லீ, தன்னுடைய இயக்கத்தில் வெளியான ஜவான் படம் 1000 கோடி ரூபாய் வசூலித்துள்ள நிலையில், அடுத்ததாக தான் இயக்கும் படத்தின் வசூல் 3000 கோடி ரூபாயாக இருக்கும் என்றும் விஜய் மற்றும் ஷாருக்கான் இணைந்து நடித்தால் இது மிகவும் எளிதாக நடக்கக்கூடிய விஷயம்தான் என்றும் அட்லீ மேலும் கூறியுள்ளார்.