இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 19ம் திகதி அதிகாலையில் மீரா தனது வீட்டு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து அவரது உடல் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. திரையுலகை சேர்ந்த கலைஞர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி விஜய் ஆண்டனிக்கு ஆறுதல் கூறினர்.

இதையடுத்து சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இதுபற்றி தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் விஜய் ஆண்டனி தனது மகள் பற்றி உருக்கமான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‛‛அன்பு நெஞ்சங்களே, என் மகள் மீரா மிகவும் அன்பானவள். தைரியமானவள். அவள் இப்போது இந்த உலகைவிட சிறந்த ஜாதி, மதம், பணம், பொறாமை, வலி, வறுமை, வன்மம் இல்லாத ஒரு அமைதியான இடத்திற்கு தான் சென்று இருக்கிறாள்.

என்னிடம் பேசிக்கொண்டு இருக்கிறாள். அவளுடன் நானும் இறந்துவிட்டேன். நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்துவிட்டேன். அவள் பெயரில் நான் செய்யப்போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும் அவளே தொடங்கி வைப்பாள்'' என உருக்கமாக தெரிவித்துள்ளார்.