இந்தியா: தமிழ்நாடு

தமிழ்நாட்டில் மொத்தம் 5 ஆயிரத்து 329 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன.

இதில் 500 கடைகள் மூடப்படும் என சட்டசபையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்தார்.

அதன்படி எந்தெந்த கடைகளை மூடலாம் என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு மண்டலத்திலும் எத்தனை கடைகள் மூடப்பட உள்ளன அவை எந்தெந்த கடைகள் என்ற பட்டியல் மண்டல மேலாளர்கள் மூலம் பெறப்பட்டு உள்ளது.

மூடப்பட உள்ள 500 மதுக்கடைகள் குறித்து விரைவில் இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் இதுகுறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி சென்னை தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது...

தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு முடிவு எடுக்கப்பட்ட நிலையில் எந்தெந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடலாம் என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறு மூடப்படும் கடைகளை இறுதி செய்யும் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன.

கடைகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக ஒரு வாரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். தமிழகம் முழுவதும் பாதுகாப்புக்காக டாஸ்மாக் கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது.

இதுதொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும் என அவர் தெரிவித்தார்.