இந்தியா: தமிழ்நாடு

மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாள் ஜூன் 3 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு கருணாநிதியின் 100-வது பிறந்த நாள் என்பதால் ஆண்டு முழுவதும் நூற்றாண்டு விழாவாக கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

தமிழக அரசு தரப்பிலும், தி.மு.க. கட்சி சார்பிலும் மிக பிரமாண்டமாக விழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் அவரது நூற்றாண்டு விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைச்சர்கள் தலைமையில் விழாக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

தி.மு.க. கொடி கம்பங்களை புதுப்பித்து கொடி ஏற்றுவது, மாவட்டம்தோறும் கருணாநிதிக்கு சிலைகள் அமைப்பது, 70 வயதுக்கு மேலான மூத்த கட்சி நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்குவது, தி.மு.க. குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது, கருத்தரங்கம்-பொதுக்கூட்டம், நூலகங்கள் தொடங்குவது என பல்வேறு நிகழ்ச்சிகளை மக்கள் பயன்பெறும் வகையில் செய்ய ஏற்பாடு செய்து வருகின்றனர்.

இதனிடையே சென்னை புளியந்தோப்பில் தி.மு.க.வின் கூட்டணி கட்சியினர் பங்கேற்கும் பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்ற உள்ளார்.

அரசு சார்பிலும் கருணாநிதியின் நூற்றாண்டு விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. கருணாநிதியை பெருமைப்படுத்தும் வகையில் அவரால் பயனடைந்த மக்களை இணைத்து விழாக்களை கொண்டாட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

மேலும் நூற்றாண்டு விழா இன்று தொடங்குவதை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்த உள்ளார்.