இந்தியா: தமிழ்நாடு

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து வரும் முதலமைச்சர் முக ஸ்டாலின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியின் காரணமாக எடப்பாடி பழனிசாமி அவதூறுகளை அள்ளித் தெளிப்பதாக தமிழ்நாடு உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று ட்விட்டரில் பதிவிட்டு இருப்பதாவது, தருமபுரியில் அரசு குடோனில் வைத்திருந்த 7,000 டன் நெல் மாயமாகி உள்ளதாக செய்திதாள்களில் வருவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

சர்க்கரையை எறும்பு தின்றது, சாக்கை கரையான் அரித்தது என்று ஒரு காலத்தில் கணக்கு காட்டியவர்கள், 7000 டன் நெல்லுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? மக்கள் வரிப்பணத்தில் உல்லாசப் பயணம் சென்றிருக்கும் இந்த சர்க்கஸ் அரசின் முதல்வர் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு நெல் மூட்டைகள் மாயமாவதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாயமான 7000 டன் நெல் மூட்டைகளை மீட்க உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டகருந்தார்.

இந்நிலையில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது...

தருமபுரி மாவட்டத்தில் வெற்றிலைக்காரன்பள்ளம் கிடங்கில் 22273 மெட்ரிக் டன் நெல் இருப்பு வைக்கப்பட்டிருந்தது. அதில் 7174 மெட்ரிக்டன் அரவைக்கு அனுப்பியது போக 15099 மெட்ரிக்டன் இருப்பு உள்ளது.

இதிலிருந்து தான் 7000 டன் இருப்பில் இல்லை என்று இரு தரப்பினர் முரணாகக் கூறுவதாகக் கேள்விக்குறியுடன் செய்தி வந்ததைப் பார்த்தவுடனே ஆட்சித்தலைவரையும் தமிழ்நாடு தருமபுரி நுகர்பொருள் மாவட்ட வாணிபக்கழக மேலாண்மை இயக்குரையும் அந்தக் கிடங்கில் 100% தணிக்கை செய்து உண்மைத்தன்மையை அறிய ஏற்பாடு செய்திட
ஆணையிட்டுள்ளேன்.

அதற்குள் அவசரப்பட்டு வெளிநாட்டு முதலீடுகளை உண்மையிலேயே ஈர்த்து வரும் நம் முதல்வர் அவர்கள் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவும் தன்னால் செய்ய முடியாத ஒன்றைச் செய்கிறாரே என்று பொறாமையின் உச்சகட்டத்தில் பத்திரிக்கையில் வந்த செய்தியை ஆராயாமல் வசவுகளை அள்ளித் தெளிக்கிறார் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள்.

தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கத் தயங்காது என்று குறிப்பிட்டுள்ளார்.