தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக கொடிகட்டி பறக்கும் நயன்தாரா வட சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள அகஸ்தியா தியேட்டரை விலைக்கு வாங்கி விட்டதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவியது.

இந்த தியேட்டர் 1967-ல் திறக்கப்பட்டது. முதல் படமாக பாமா விஜயம் திரையிடப்பட்டது. எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்கள் இங்கு திரையிடப்பட்டுள்ளன.

பழமையான இந்த தியேட்டரை கடந்த 2020-ம் ஆண்டில் மூடி விட்டனர். தற்போது அகஸ்தியா தியேட்டரை நயன்தாரா விலைக்கு வாங்கி இருப்பதாகவும், அதை இடித்துவிட்டு மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள் கட்டப்போவதாகவும் வலைத்தளத்தில் தகவல் வெளியானது.

ஏற்கனவே நயன்தாரா ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல தொழில்களில் முதலீடு செய்து வருகிறார். தற்போது தியேட்டர் தொழிலில் இறங்கப்போகிறார் என்று பேச்சு எழுந்தது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பில் திரையரங்க நிர்வாகம் அளித்திருக்கும் விளக்கத்தில், அகஸ்தியா திரையரங்க நிர்வாகம், அகஸ்தியா திரையரங்கம் அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வருவதால் அதனை யாருக்கும் விற்க முடியாது என்றும், நயன்தாரா இந்த இடத்தை வாங்கிவிட்டார் என்று வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை‌‌ என தெரிவித்திருக்கிறது.

மேலும் அகஸ்தியா தியேட்டரை வாங்கியதாக வெளியான தகவலை நயன்தாராவும், அவரது கணவர் விக்னேஷ் சிவனும் மறுத்துள்ளதாக அவர்களின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.