தமிழில் தனுஷ் ஜோடியாக ஆடுகளம் படத்தில் அறிமுகமாகி முன்னணி நடிகையாக உயர்ந்த டாப்சி தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது இந்தியில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் டாப்சி தனது வாழ்க்கையில் எதிர்கொண்ட அவமானங்களை பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியதாவது...

நான் ஆரம்ப காலத்தில் இந்திய அழகி போட்டிகளில் பங்கேற்றேன். அப்போது அங்கிருந்த அரசியலை பார்த்து எனக்கு அருவருப்பு ஏற்பட்டது. மிகவும் வேதனை அடைந்தேன். போட்டி சமயத்தில் எனது சுருட்டை தலை முடியை பார்த்து அங்குள்ள பலர் ஏளனம் செய்தார்கள்.

இப்படிப்பட்ட சுருட்டை முடியோடு இந்திய அழகி போட்டியில் ஜெயிக்க முடியாது என்று கேலி செய்தனர். இன்னும் கொடுமை என்னவென்றால் கார்பரேட் நிறுவனங்களை சேர்ந்த சிலர் என்னிடம் வந்து ஒருவேளை இந்திய அழகி போட்டியில் ஜெயித்தால் எங்கள் நிறுவனங்களின் சார்பில் 3 வருடங்கள் பணியாற்ற வேண்டும்.

30 சதவீதம் வருவாயை எங்களுக்கு கொடுக்க வேண்டி இருக்கும் என்றும் பயமுறுத்தினார்கள். அந்த நாட்கள் எனக்கு ஒரு கெட்ட கனவாகவே இருக்கிறது என்றார்.